நேபாளம்: விமான சரக்கு பகுதியில் மறைத்து 100 கிலோ தங்கம் கடத்தல்; 2 பேர் கைது

நேபாளத்தில் விமான நிலையத்தில் 100 கிலோ வரையிலான தங்கம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2023-07-20 10:01 GMT

காத்மண்டு,

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு பகுதியில் இருந்து சந்தேகத்திற்குரிய வகையில் வெளியேறி, சுங்க சோதனை சாவடி பகுதியை கடந்து சென்ற 2 பேரை அந்நாட்டு வருவாய் துறை அதிகாரிகள் நிறுத்தி, சோதனை நடத்தினர்.

இதில், அவர்கள் இருவரும் 80 முதல் 100 கிலோ எடை வரையிலான தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இரண்டு பேரையும் கைது செய்தனர்.

ஹாங்காங்கில் இருந்து நேற்று மதியம் வந்த கதே பசிபிக் விமானத்தின் சரக்கு பகுதியில் வைத்து இந்த தங்கம் கடத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுபற்றி வருவாய் புலனாய்வு துறை தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளது. இந்த தங்கம் விமானத்தின் சரக்கு பகுதியில் சில இயந்திர பாகங்களுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தங்கத்தின் எடையை மதிப்பீடு செய்து உறுதி செய்யும் பணி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட தொடர்புடைய நபர்களை விசாரிக்கும் பணி ஆகியவை நடந்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்