காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் - இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

Update: 2023-11-17 21:41 GMT

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாமுனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இதனிடையே, போர் இன்று 43 வது நாளாக நீடித்து வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 11 ஆயிரத்து 470-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 850ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசா முனையில் உள்ள கான்யூனிஸ் நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எங்கள் ராணுவ நடவடிக்கையை மேலும் முன்னெடுத்து செல்வதில் உறுதியாக உள்ளோம். தெற்கு காசா பகுதி உள்பட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்