உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை - தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்!

தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்துவிட்டோம் என்று அந்நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-01 01:50 GMT

மென்லோபார்க்,

இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் நேற்று திடீரென முடங்கியது. இதை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என டுவிட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தங்களுக்கு செய்தி வந்ததாக நேற்று புகாரளித்தனர். மேலும் சிலர் தங்களது கணக்குகளில் பாலோவர்ஸ்( பின்தொடர்பவர்களின்) எண்ணிக்கை பெரிதும் குறைந்து வருவதாகவும் பெரிய வீழ்ச்சியை காட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த புகார் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. இது குறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, உலகளவில் ஏறத்தாழ 8 மணிநேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அதன் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அணுகுவதில் சிக்கல் இருந்தது. சில இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்காலிகமாக மாறுதல் அடைந்திருக்கலாம். தொழில்நுட்பக் கோளாறு தான் இதற்கு காரணம். அதை சரிசெய்துவிட்டோம்' என்று அந்நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்