கனடாவில் 'பியோனா' என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!

கனடாவின் கிழக்கு பகுதிகளை 'பியோனா' புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-09-24 09:00 GMT

ஒட்டாவா,

கனடாவின் கிழக்கு பகுதிகளை 'பியோனா' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பியோனா புயல் அட்லாண்டிக் கடலில் உள்ள தீவான பெர்முடாவை பலத்த மழை மற்றும் காற்றுடன் நேற்று தாக்கியது. அங்கு மணிக்கு 103 மைல்கள் (166 கிமீ) வேகத்தில் காற்று வீசியது என்று பெர்முடா வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து பியோனா புயல் தற்போது கிழக்கு கனடாவை நோக்கி வடக்கு நோக்கி செல்கிறது. கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பியோனா புயல் ஏற்கனவே வாரத்தின் தொடக்கத்தில் கரீபியன் தீவுகளைத் தாக்கியதில், அங்கு குறைந்தது எட்டு பேர் பலியாகினர்.

வெள்ளிக்கிழமை பிற்பகலில், பியோனா புயல் கனடாவின் கிழக்கு கடற்கரையில் நோவா ஸ்காட்டியா பகுதியில் ஹாலிபாக்ஸ்க்கு தெற்கே 475 மைல்கள் (770 கிமீ) தொலைவில் நிலை கொண்டுள்ளது. பியோனா புயல் மணிக்கு 35 மீட்டர் (56கிமீ) வேகத்தில் வடக்கு நோக்கி நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனடாவின் கேப் பிரெட்டன் தீவை ப்யல் கடுமையாக தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 8 அங்குலம் (20 செமீ) வரை மழை பெய்யும், அதே சமயம் சூறாவளி காற்று கட்டிடங்களை சேதப்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

"பொதுமக்கள் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார். கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, நாட்டின் இரண்டு பெரிய விமான நிறுவனங்கள் ஏர் கனடா மற்றும் வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் ஆகியவை வெள்ளிக்கிழமை மாலை முதல் பிராந்திய சேவையை நிறுத்தியுள்ளன.

அதை தொடர்ந்து கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்