ஓராண்டு நிறைவு... மங்கும் போர் நிறுத்த வாய்ப்புகள்... - உக்ரைனுக்கு மேலும் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா...!

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

Update: 2023-02-25 04:20 GMT

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் இன்று 367-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், போர் தொடர்ந்து நீடிக்கும் வகையிலான நடவடிக்கைகளையே அமெரிக்கா எடுத்து வருகிறது. அதன்படி உக்ரைனுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, உக்ரைனுக்கு 2 பில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ஆய்த உதவியின் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 16 ஆயிரத்து 586 கோடியே 71 லட்ச ரூபாய் ஆகும்.

உக்ரைன் போர் ஓராண்டை கடந்துள்ள நிலையில் ரஷியாவுக்கு சீனா ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை வழங்குவதால் இப்போர் இப்போதைக்கு முடிவுக்கு வர சாத்தியக்கூறுகள் இல்லை என்றே தோன்றுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்