அர்ஜெண்டினா: போர்க்குற்ற வழக்கில் முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு சாகும்வரை சிறை

அர்ஜெண்டினாவில் போர்க்குற்ற வழக்கில் முன்னாள் ராணுவ ஜெனரல் சாண்டியாகோ ரிவேரோஸ்சுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-07-07 20:54 GMT

பியூனோஸ் அயர்ஸ்,

அர்ஜெண்டினா நாட்டில் 1976-ம் ஆண்டு தொடங்கி 1983-ம் ஆண்டு வரையில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. அப்போது 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் போயினர்.

மேலும், அந்த கால கட்டத்தில் சுமார் 350 பேரை ராணுவ உயர் அதிகாரிகள் சித்ரவதை செய்ததாகவும், பலரை காணாமல் போகச்செய்ததாகவும், கொலை செய்ததாகவும், குழந்தைகளை கடத்தியதாகவும் இன்னபிற போர்க்குற்றங்களை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மெர்சிடஸ் பென்ஸ் தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள், வலதுசாரி கொலைப்படைகளால் கடத்தப்பட்டதாகவும் அவர்கள் கேம்போ டி மேயோ தடுப்பு காவல் மையத்தில் தடுப்புக்காவலில் வைத்து சித்ரவதைக்கு ஆளாக்கி காணாமல் போகச்செய்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் கடத்தி கொல்லப்பட்டுவிட்டதாகவும் ஊகிக்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ராணுவ ஜெனரல் சாண்டியாகோ ரிவேரோஸ் உள்பட 19 முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் ஆளாகினர். அவர்கள் மீதான குற்றச்சாட்டை தலைநகர் பியூனோ அயர்ஸ்சில் உள்ள பெடரல் கோர்ட்டு விசாரித்தது. விசாரணை முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோர்ட்டு கண்டறிந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் ராணுவ ஜெனரல் சாண்டியாகோ ரிவேரோஸ்சுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் மீது மட்டுமே 100 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற 18 முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் பல்வேறு அளவிலான நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு அர்ஜெண்டினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்