ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வாரம் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அகழ்வைப்பகங்களில் பார்வையாளர்கள் கட்டணம் இன்றி ஒருவார காலத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையில் பழமையான பொருட்கள் பண்டைய நாணயங்கள், போர்க்கருவிகள், முதுமக்கள், தாழி கடவுள் சிலைகள், போர் வீரர்கள் பயன்படுத்திய உடைகள், உள்ளிட்ட பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உலக மரபு வார விழாவையொட்டி ஒரு வார காலத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் இன்றி கோட்டையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கோட்டையை கண்டு ரசித்தனர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்றது. நேற்று மாலை நிறைவு நாள் விழா டேனிஷ் கோட்டை மேல் தளத்தில் நடைபெற்றது. இதில் தரங்கம்பாடி, டி.இ.எல்.சி. பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சியை நடத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் தொல்லியல் துறை அதிகாரிகள், ஆசிரியர், மாணவ- மாணவிகள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.