ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட மேற்கு தெருவில் சில பகுதிகளில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை. இது சம்பந்தமாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாசெந்தில் குமார், துணைத் தலைவர் மகேஸ்வரி அய்யப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.