மங்கைமடம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?

மங்கைமடம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?

Update: 2022-09-18 18:45 GMT

மங்கைமடம் கிராம நிர்வாக அலுவலகத்திற்க புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலகம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் மங்கைமடம், ஏம்பாவை உள்ளிட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊராட்சி நிர்வாகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல் கிராம நிர்வாக அதிகாரிகளின் பணியும் மிகவும் முக்கியமானதாகும். இதனை கருத்தில் கொண்டு தான் கிராமங்கள் தோறும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்கள் கடந்த 2001-2006-ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு கிராமங்களிலும் கட்டப்பட்டன. அப்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மங்கைமடம் கிராம நிர்வாக அலுவலகம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.

வாடகை கட்டிடத்தில்

இதன் காரணமாக அந்த அலுவலகம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தமிழக அரசு ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும் கணினி வசதி, இன்டர்நெட் வசதிகளை நவீன மயமாக்க உள்ளது. இந்த திட்டத்தை விரிவு படுத்தி மேலும் சேதமடைந்த கட்டிடங்கள் உள்ள நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய கட்டிடம்

அதன்படி மங்கைமடம் நிர்வாக அலுவலக கட்டிடத்தை புதிதாக கட்டித் தர வேண்டும். அதேபோல் மணி கிராமம், காத்திருப்பு உள்ளிட்ட சீர்காழி தாலுகாவில் பல கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்