சாலை அமைக்கும் பணி தொடங்குவது எப்போது?

சிவகாசி அருகே சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-08-19 19:03 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சாலை அமைக்கும் பணி

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்தில் சிவானந்தம் நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து சாலையை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தது. ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் புதிய சாலை அமைக்க தேவையான கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் அந்த பகுதியை கடந்த செல்ல வேண்டி உள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சிவானந்தம் நகர் பகுதியில் உள்ள சாலையை சீரமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கற்கள் பரப்பி வைக்கப்பட்டது. பின்னர் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அந்த சாலை வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆதலால் மேற்கண்ட பகுதியில் சாலை அமைக்கும் பணியினை உடனே தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்