பிளக்ஸ் போர்டு வைத்ததை கண்டித்து கிராமமக்கள் சாலைமறியல்

பிளக்ஸ் போர்டு வைத்ததை கண்டித்து கிராமமக்கள் சாலைமறியல்

Update: 2023-02-16 19:42 GMT

ஒரத்தநாடு அருகே தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பிளக்ஸ் போர்டு வைத்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிளக்ஸ் போர்டு

தஞ்சை மாவட்டம் உறந்தைராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது62). இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பொது பிரச்சினை உள்பட சில காரணங்களால் முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குகளும் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் அமிர்தலிங்கம் அவரது வீட்டிற்கு முன்பு சாலையோரத்தில் பெண்கள் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளார்.

கிராம மக்கள் சாலை மறியல்

இவ்வாறு தகாத வார்த்தைகளை குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டு வைத்துள்ள அமிர்தலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று பட்டுக்கோட்டை- தஞ்சை பிரதான சாலையில் உறந்தைராயன்குடிக்காட்டில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பெண் கைது

இதனை தொடர்ந்து உறந்தைராயன் குடிக்காட்டைச்சேர்ந்த கண்ணதாசன் (42) என்பவர் ஒரத்தநாடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பெண்கள் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் குறிப்பிட்டு ஏன்? பிளக்ஸ் போர்டு வைத்துள்ளீர்கள் என்று அமிர்தலிங்கத்திடம் நான் முறையிட்டபோது, அவரும், அவரது மனைவி சுமத்ரா (45), மகள் அனிதா (23) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் அமிர்தலிங்கம், சுமத்ரா, அனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அனிதாவை கைது செய்தனர். மேலும் அமிர்தலிங்கம், அவரது மனைவி சுமத்ரா ஆகியோரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்