சுற்றுலா பயணிகள் தங்குமிடத்தை சீரமைக்க வேண்டும்

மேல்நாரியப்பனூரில் சுற்றுலா பயணிகள் தங்குமிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-08 17:10 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் பழமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சின்னசேலம் பகுதியை மட்டுமின்றி சேலம், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் ஆண்டுதோறும் ஜூன் மாத்தில் ஆண்டு பெருவிழா நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காகவும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களின் நலன் கருதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேல்நாரியப்பனூரில் சுற்றுலா பயணிகள் தங்குமிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. தற்போது அந்த கட்டிடத்தை சமூக விரோதிகள் சிலர் மது அறுந்தும் கூடாரமாக மாற்றி உள்ளனர். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியை சீரமைக்க கோரி் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கோவிந்தன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புனித அந்தோணியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆலயத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் தங்கி ஆலயத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பழுதடைந்துள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியை சீரமைக்க வேண்டும். மேலும் கூடுதல் கட்டிட வசதியையும் செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்