கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உல்லாச படகில் உற்சாகத்துடன் பயணம் செய்து கடல் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-06-25 18:45 GMT

கன்னியாகுமரி:

ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உல்லாச படகில் உற்சாகத்துடன் பயணம் செய்து கடல் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

உல்லாச படகில்...

பின்னர், கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண பூம்புகார் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதைத்தொடர்ந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

இதேேபால் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கும் சுற்றுலா பயணிகள் உல்லாச படகில் உற்சாகத்துடன் சென்று படகு பயணத்தையும், கடல் அழகையும் ரசித்தனர். திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்ைல.

தீவிர கண்காணிப்பு

மேலும், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்