தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-08-23 19:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தக்காளி ஏலம்

கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு, சுற்று வட்டாரத்தில் விளையும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பறித்து வருகின்றனர். பின்னர் நடைபெறும் ஏலத்தில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். குறிப்பாக கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிகளவில் தக்காளிகளை கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் பருவமழை சரிவர பொய்யாததால் தக்காளி வரத்து இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் செஞ்சேரிமலை, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி வருகிறது.

விலை வீழ்ச்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு மொத்தம் 20 டன் தக்காளியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.29-க்கு ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.43-க்கு விற்பனையானது. இது கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.14 குறைவு ஆகும். தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருவதால், அதை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தற்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்