திருச்செந்தூர்,காயல்பட்டினம்பகுதியிலுள்ள10 யூனியன் பள்ளிகளை நகராட்சிகள் வசம் ஒப்படைக்க முடிவு

திருச்செந்தூர்,காயல்பட்டினம்பகுதியிலுள்ள 10 யூனியன் பள்ளிகளை நகராட்சிகள் வசம் ஒப்படைக்க யூனியன் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-07 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நேற்று யூனியன் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் செல்வி வடமலைபாண்டியன் தலைமை தாங்கினார். ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா, துணை தலைவர் ரெஜிபெர்ட் பர்னாந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரவு-செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திருச்செந்தூர் நகராட்சி கந்தசாமிபுரம், மேலரதவீதி, டி.பி.ரோடு, சங்கிவிளை ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி மங்களவாடி, ஓடக்கரை, கொம்புத்துறை, கே.டி.எம் தெரு, தைக்கா தெரு, தீவு தெரு ஆகிய இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 10 பள்ளிகளை அந்தந்த நகராட்சி வசம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் யூனியன் பகுதிகளில் உள்ள பழுதடைந்து பயனற்று உள்ள அரசு கட்டிடங்களை இடிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில், உதவி பொறியாளர் பிரேம் சந்தர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தோனி பன்னீர்செல்வம், இசக்கியம்மாள், பழனிகார்த்திகேயன், அமுதலெட்சுமி, பணிமேற்பார்வையாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்