பூவும், காயுமாக இருந்த முருங்கை மரங்களை அழித்த விவசாயி

பூவும், காயுமாக இருந்த முருங்கை மரங்களை விவசாயி அழித்தார்.

Update: 2023-09-15 19:49 GMT

மீன்சுருட்டி:

முருங்கைக்காய் சாகுபடி

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள வீரசோழபுரம், காட்டுக்கொல்லை, முத்துசேர்வாமடம், பாப்பாக்குடி, படைநிலை, காடுவெட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் முருங்கையை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் முருங்கை கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை, வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

விலை குறைவால் ஏமாற்றம்

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான குமார், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்திருந்தார். தற்போது முருங்கை மரங்கள் பூவும், பிஞ்சுமாய் காய்த்து வருகிறது. இதையடுத்து கூலி ஆட்களை கொண்டு பறிக்கப்பட்ட முருங்கைக்காயை விற்பனைக்காக கும்பகோணம் சந்தைக்கு குமார் கொண்டு சென்றார். அங்கு கடந்த சில நாட்களாக முருங்கைக்காய் கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரையே விற்பனையாகி உள்ளது. முருங்கைக்காயின் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பறிக்கப்பட்ட முருங்கைக்காய்களை சந்தைக்கு கொண்டு சென்ற குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரூ.2, ரூ.3 என விற்பனையான முருங்கைக்காயை கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது.

முருங்கை மரங்கள் அழிப்பு

இதனால் விரக்தி அடைந்த குமார் முருங்கை வயலுக்கு வந்து, பறிக்கும் கூலிச்செலவுக்கு கூட முருங்கைக்காய் விற்பனையாகவில்லையே என்ற விரக்தியில் பூவும், பிஞ்சும், காயுமாக இருந்த முருங்கை மரங்களை டிராக்டரை கொண்டு அழிக்க முடிவு செய்தார். அதன்படி முருங்கை மரங்களை முழுவதுமாக அழித்து உழவு செய்துள்ளார். இது குறித்து விவசாயி குமார் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் முருங்கைக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிக்காததால் தற்போது 2 ரூபாய் முதல் 3 ரூபாய்க்கு கூட சந்தையில் வாங்குவதற்கு ஆள் இல்லை. இந்த விலை முருங்கைக்காயை பறிப்பதற்கான கூலி செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. இந்த வயலில் 4 டன் அளவிற்கு முருங்கைக்காய் மரங்களில் உள்ளது. வேறு வழி இல்லாததால், அவற்றை தற்போது அழித்து வருகிறேன். வருங்காலங்களில் இது போன்ற சூழல் விவசாயிக்கு ஏற்படாத வகையில் முருங்கைக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டவாரு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறார். இந்த வீடியோ காண்பவர்களின் கண்களை கலங்க செய்வதாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்