பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

Update: 2023-05-11 21:30 GMT

நெல்லை மாவட்டம் அம்பை கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களான சுபாஷ், அருண்குமார், வேதநாராயணன், சூர்யா ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் பல்வீர்சிங் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பல்வீர்சிங்கின் கார் டிரைவர்கள் மற்றும் பாதுகாவலர்களான 4 போலீசார் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நேற்று காலையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ரூபன், மாரியப்பன் ஆகியோர் நெல்லை சி.பி.சி.ஐ.டி. ஆர்கனைஸ்டு கிரைம் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்களின் வாக்குமூலத்தை அவர் பதிவு செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்