இந்திய அளவில் மின்உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் சூரியமின்சக்தி கொண்டதாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய அளவில் மின்உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழும் என்றும் அரவக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-11-11 18:30 GMT

தொடக்க விழா

எரிசக்தித் துறையின் 2022-23-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடனும் நடப்பு நிதியாண்டில் 50 ஆயிரம் எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி தமிழ்நாடுமின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்ட தொடக்கவிழா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தடாகோவிலில் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார். முதல்-அமைச்சருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினார்கள். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

புதிய மின் இணைப்புகள்

பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதால் இன்று என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை. அந்த மகிழ்ச்சியில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜி எதைச் செய்தாலும் அதிலே ஒரு முத்திரையை பதிப்பார். அந்த வகையில் முத்திரை பதித்திருக்கக்கூடிய இந்த விழாவில் தமிழகத்தினுடைய முதல்-அமைச்சர் என்கிற முறையில் கலந்து கொள்வதிலே நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.தமிழக அரசின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இன்றைக்கு (நேற்று) வழங்கக்கூடிய வகையில் இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு லட்சம் இணைப்புகளை வழங்கியிருக்கிறோம். எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது, ஒரு லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள், அதிலும் இந்த குறுகிய காலத்திற்குள்ளாக, 15 மாதகாலத்திற்குள்ளாக வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால், இதைவிட ஒரு மிகப்பெரிய சாதனையை நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள்

இதற்கு முன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையைச் செய்ததாக வரலாறு கிடையாது. நம்முடைய அரசுதான் செய்து காட்டி இருக்கிறது. ஏன், இந்தியாவிலே எந்த மாநிலத்திலாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் கிடையாது, நம்முடைய மாநிலம்தான், தமிழ்நாடு தான் அந்த சாதனையைச் செய்து காட்டியிருக்கிறது. அதனால்தான் இதனை பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள் என்று நான் சொன்னேன்.நான் வந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். தமிழக விவசாயிகள் வாழ்வு மலர்ந்திட, உணவு உற்பத்தி பெருகிட 50 ஆயிரம் கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்ட தொடக்க விழா பயனாளிகளுடைய விவரம் என்று ஒரு புத்தகம் வைத்திருந்தார்கள். அதைப் புரட்டிப் பார்த்தேன். உடனே அமைச்சரிடத்தில் கேட்டேன், இன்றைக்கு 50 ஆயிரம் மின் இணைப்பு என்று விளம்பரப்படுத்தி விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோமே, அதனுடைய விவரமா என்று கேட்டேன். இல்லை, 50 ஆயிரம் பேரை இந்தத் திடலுக்குள் அழைத்துவந்து உட்கார வைக்க இடம் இல்லை, அதற்கு வாய்ப்பு இல்லை.

தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய சாதனை

எனவே, 20 ஆயிரம் பேரைத்தான் அழைத்திருக்கிறோம். அந்த 20 ஆயிரம் பேருடைய பெயர் இந்தப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது என்றார். பெயர் மட்டுமல்ல, முகவரி மட்டுமல்ல, அவர்களுடைய செல்போன் எண் உள்பட முழுமையாக சேகரித்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். எதற்காக இதைச் சொல்கிறேன் என்று சொன்னால், ஏதோ சொல்லிவிட்டு, பேசிவிட்டு செல்கிறவர்கள் அல்ல, அதைச் செய்து காட்டக்கூடியவர்கள் நம்முடைய அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சாதனையைத் தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய அளவிற்கு செய்து காட்டியிருக்கக்கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜியை நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். நான் இப்போது மட்டுமல்ல, பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரை பாராட்டி, வாழ்த்தி பேசியிருக்கிறேன்.

மனதார பாராட்டுகிறேன்

அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், டார்கெட் வைத்து செயல்படக்கூடியவர். டார்கெட் என்றால் உங்களுக்குத் தெரியும். ஏதோ ஒரு குறிக்கோளை வைத்து அந்த காரியத்தைச் செய்வார். ஆக, தனக்கு டார்கெட்டை வைத்துக்கொண்டு, அந்த டார்கெட்டை எப்படியும் முடித்தே தீருவார் செந்தில்பாலாஜி. நான், அதைச் சொன்னபோது, ஒரு சிலருக்கு புரியாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த புரியாதவர்களுக்கும் இன்றைக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.ஒரு இலக்கை தனக்குத் தானே வைத்துக் கொண்டு, அதை முடித்துக் காட்டக்கூடிய வல்லவர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி, அவரைப் பாராட்டுவது மட்டுமல்ல, அவருக்கு துணை நின்றிருக்கக்கூடிய அதிகாரிகள், அலுவலர்கள், அத்தனை பேரையும் இந்த நேரத்திலே நான் மனதாரப் பாராட்டு கிறேன். என்னுடைய சார்பிலே மட்டுமல்ல, முதல்-அமைச்சர் என்கிற முறையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பில் நான் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

முடித்து காட்டுவது தி.மு.க. ஆட்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் உழவர்களை மகிழ்விக்கும் வகையில், ஓர் ஆண்டில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்குவோம் என்று ஏற்கனவே அறிவித்தோம். அப்போது எல்லோரும் என்ன நினைத்தார்கள் என்றால், இது நடக்குமா? சாத்தியமா? முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். நடக்குமா என்று கேட்பதை நடத்திக் காட்டுவதும், சாத்தியமா? என்று கேட்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா? என்பதை முடித்துக் காட்டுவதும்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதை யாரும் மறந்துவிட வேண்டாம். இனிமேல் அப்படி ஒரு எண்ணம், ஒரு சந்தேகம் யாருக்கும் வரவேண்டாம். கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி இந்த திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். தொடங்கி வைத்த 6 மாதத்தில், ஒரு லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஒரு லட்சமாவது மின் இணைப்பையும் நான்தான் வழங்கினேன். இப்போது கூடுதலாக 50 ஆயிரம் இணைப்புகளையும் நானே இங்கே வழங்கி இருக்கிறேன். இதன் மூலமாக 1½ லட்சம் விவசாயிகள் பயனடைய இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு எவ்வளவு உணவுப் பொருட்கள் கிடைக்கப் போகிறது என்பதை நினைத்தாலே, எனக்கு பெருமையாக இருக்கிறது, எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கும்.

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்

இந்த நேரத்தில் நம்முடைய மறைந்த தலைவர் கருணாநிதியை நினைத்துப் பார்க்கிறேன். ஏனென்றால், முதன்முதலில் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை உருவாக்கித் தந்தவர்தான் முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி. 1989-1990-ம் ஆண்டில் அதை தொடங்கி வைத்தார். இந்த 30 ஆண்டு காலத்திலும், எல்லாக் காலத்திலும் உணவுப் பொருள் விளைவித்து, தமிழ்நாட்டு உழவர் பெருமக்கள் வளம் பெற தலைவர் கருணாநிதி தான் அன்றும், இன்றும் காரணகர்த்தாவாக அமைந்திருக்கிறார்.அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். கடந்த 10 ஆண்டு காலம் ஒரு ஆட்சி நடந்தது. அதை, நடந்தது என்று சொல்ல முடியாது, இருந்தது. அது எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த 10 ஆண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் வழங்கப்பட்டன. ஆனால் நாம் 15 மாத காலத்தில், 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம்.

பொற்கால ஆட்சியின் அடையாளங்கள்

சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம். இது கலைஞரின் முழக்கம்!. சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்! இதுதான் ஸ்டாலினுடைய முழக்கம். அதுதான் வித்தியாசம். அந்த வரிசையில்தான் சொல்லாமல் செய்து காட்டி இருக்கிறோம். நாடு முழுவதும் நமது நல்லாட்சியில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் விளைச்சலும் அதிகமாகி கொண்டிருக்கிறது. பாசனப் பரப்பும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.உணவுப் பொருள் உற்பத்தி கூடுதலாகி வருகிறது.இதன் காரணமாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உணவுப்பொருட்களின் விலையும் குறைவாக உள்ளது.விலைவாசி குறைவாக உள்ளது.பணப்புழக்கம் அதிகமாகி உள்ளது.பணவீக்கம் குறைந்துள்ளது. மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதி தரப்பட்டிருக்கின்ற காரணத்தால் பெண்களின் பொருளாதார வலிமை கூடியிருக்கிறது. பல்வேறு சமூகநலத் திட்டங்களின் மூலமாக வாழ்க்கைத் தரம் தமிழகத்தில் நிலையானதாக அமைந்திருக்கிறது. இவை அனைத்தும் நம்முடைய பொற்கால ஆட்சியின் அடையாளங்கள்!. எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் அதிகளவில் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கு இவையெல்லாம் அடையாளம்!. ஒரு துறை மட்டுமல்ல எந்தத் துறை எடுத்துப் பார்த்தாலும் ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்காக உழைத்து வருகின்றன.

74 சதவீதம் பங்களிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இன்றைய தேதி வரை பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.தமிழ்நாட்டு மக்களுக்காக மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் திறப்பு, அதில் பெறப்பட்டிருக்கின்ற புகார்களுக்கு 99 சதவீதம் உடனடித் தீர்வு. உயர் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்ப்பதற்காக புதிதாக 8,905 மின் வினியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டன. மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, 23 ஆயிரத்து 780 புதிய மின் வினியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டன. அகில இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதல் இடம்.1,528 மெகாவாட் புதிய சூரிய மின்சக்தி மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு, இந்திய அளவில் சூரியஒளி மின் உற்பத்தியில் 4-வது இடம். கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி மரபுசாரா எரிசக்தியின் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வில் 74 சதவீதம் பங்களிப்பு செய்து இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறோம். இப்படி பல்வேறு சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

சூரிய மின்சக்தி மாவட்டங்களாக...

தமிழ்நாட்டில் தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களினுடைய திறன் 34 ஆயிரத்து 867 மெகாவாட். மின்தேவையை கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாமல், வரும் 2030-ம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தியின் மூலம் 6 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்களும், 14 ஆயிரத்து 500 மெகாவாட் நீரேற்றுபுனல் மின் உற்பத்தி நிலையங்களும், 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களும், 2 ஆயிரம் மெகாவாட் மின்கலன் சேமிப்பு நிலையங்களும், 3 ஆயிரம் மெகாவாட் திறனுக்கு வாயுசுழலி எரிசக்தி நிலையங்களும் என ஆக மொத்தம் 30 ஆயிரத்து 500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களைத் தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.இதனால், தமிழ்நாட்டின் மின் உற்பத்தி வருகின்ற 2030-ம் ஆண்டில் 65 ஆயிரத்து 367 மெகாவாட் திறனாக உயரும். தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது.

மின்உற்பத்தியில் முதல் மாநிலம்

இதனால், தமிழ்நாடானது, மின்உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகத் திகழும் என்ற மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு இந்த அவையில் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். "முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்" என்பது நமக்கு கலைஞர் கற்றுத் தந்திருக்கிறார். அத்தகைய வெற்றியை எந்நாளும் பெறுவோம்.மக்களுக்கான சேவையே மகத்தான சேவை என்ற ஒரே குறிக்கோளோடு, மழைநேரங்களிலும், இயற்கை இடர்பாடுகளின்போதும், தன்னலமின்றி தொடர்ந்து சேவைசெய்து வரும் தன்னிகரற்ற அனைத்து மின்வாரியத் தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம். மண்ணைக் காப்போம். மக்களைக் காப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி, ஜோதிமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம் (குளித்தலை), கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மேயர் கவிதாகணேசன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எரிசக்தித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா வரவேற்றார். முடிவில் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்