தமிழகம் 80 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது- இயக்குனர் பழனிசாமி தகவல்

தமிழகம் 80 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது என்று எழுத்தறிவு திட்ட இயக்குனர் பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2023-08-03 21:32 GMT


தமிழகம் 80 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது என்று எழுத்தறிவு திட்ட இயக்குனர் பழனிசாமி தெரிவித்தார்.

40 வயதுக்கு மேற்பட்டோர் பயனாளிகள்

மதுரையில் பள்ளிக்கல்வித்துறையின் எழுத்தறிவு திட்ட இயக்குனர் மு.பழனிசாமி கூறியதாவது:

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டம் அனைவரும் அடிப்படை எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சிய திட்டமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடிப்படை கல்வி வழங்குவதே இதன் நோக்கமாகும். இதில் கடந்த கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த கல்வியாண்டில் நிர்ணயித்த இலக்கான 4 கோடியே 80 லட்சத்தை கடந்துள்ளது. இவர்களுக்கான பயிற்சி அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது.

இதில் 40 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து பயனடைகின்றனர். 20 பேருக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள ஒரு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை 2 மணி நேர அடிப்படையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது. மாதந்தோறும் 200 மணி நேரம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்காக தனி புத்தகம் தயாரிக்கப்பட்டு அதன்படி கற்றுத்தரப்படுகிறது. இதில் தமிழ் எழுத்துக்கள், எண், வாசிப்பு, வார்த்தை அமைப்பு, வாய்ப்பாடு ஆகியன கற்றுத்தரப்படுகிறது.

80 சதவீதம் எழுத்தறிவு

பின்னர் செயல்வழிக்கற்றல் அடிப்படையில் ஆதார் அட்டை பெறும் வழிமுறை, வங்கிகளில் விண்ணப்பம் பூர்த்தி செய்வது உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கற்றுத்தரப்படுகிறது. முடிவில், கற்றுத்தரப்படும் பாடங்களின் அடிப்படையில் எழுத்துக்கூட்டி படிப்பது, வாசிப்பது, வார்த்தை அமைப்பது, வார்த்தைகளை மாற்றி அமைத்து சரியான வார்த்தை அமைப்பது, எண் கணிதம் ஆகியவற்றில் அவர்களின் திறமை பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

தற்போது தமிழகம் 80 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உள்ளது. இதனை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்