திருக்குறள் கற்பிக்கும் ஆன்மீகம் பற்றி யாருமே கூறுவதில்லை - கவர்னர் ஆர்.என். ரவி

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.

Update: 2022-10-07 08:03 GMT

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். அப்போது திருக்குறள் குறித்து கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது,

திருக்குறள் ஆகச்சிறந்த படைப்பு. ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கொண்ட புத்தகம். அது நமது பாரத நாட்டின் பெருமை கொண்ட ஒன்று. ஒரு மனிதன் எப்படி இருக்க இருக்க வேண்டும் என்று கூறும் ஒரு நூல் தான் திருக்குறள்.

அதுமட்டுமல்லாமல் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. ஆனால் இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புத்தகத்தை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் அது தெரியும். ஆனால் திருக்குறள் கற்பிக்கும் ஆன்மீகம் பற்றி யாருமே கூறுவதில்லை.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை ஜி.யு.போப் தவறாக மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.

திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை. திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. தமிழ் புத்தகங்கள் பல மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டதால் எளிதாக தமிழ் கற்றுக்கொள்ள முடிகிறது. இருப்பினும், திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்