மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்ய 512 இடங்களில் சிறப்பு முகாம்- மேயர் இந்திராணி தகவல்

மதுரை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவு செய்ய 512 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது என்று மேயர் இந்திராணி கூறி உள்ளார்.

Update: 2023-07-26 00:34 GMT


மதுரை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவு செய்ய 512 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது என்று மேயர் இந்திராணி கூறி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

512 இடங்கள்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கு சிறப்பு முகாம் நடந்து வருகிறது. முதற்கட்டமாக இந்த முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் 35 இடங்களிலும், மண்டலம் 2-க்கு உட்பட்ட பகுதிகளில் 38 இடங்களிலும், மண்டலம் 3-க்கு உட்பட்ட பகுதிகளில் 182 இடங்களிலும், மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளில் 188 இடங்களிலும், மண்டலம் 5-க்கு உட்பட்ட பகுதிகளில் 69 இடங்களில் என மொத்தம் 512 இடங்களில் நடைபெற்று வருகிறது. அதில் 208 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 83 சமுதாய கூடங்கள், 4 பூங்காக்கள், 72 அரசு துறை கட்டிடங்கள், 21 வழிபாட்டு தலங்கள், 116 திருமண மண்டபங்கள், 8 தனியார் குடியிருப்பு பகுதிகள் அடங்கும்.

பதிவு நேரம்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 207 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 2 லட்சத்து 2 ஆயிரத்து 94 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும். பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் முகாம் நடைபெறும்.

எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்