பள்ளி மாணவ-மாணவிகள் மறியல்

நத்தத்தில், அரசு பஸ்களை முறையாக இயக்க வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-15 23:30 GMT

அரசு பஸ்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி, கோமனாம்பட்டி வழியாக சாத்தாம்பாடிக்கு தினமும் காலை, மாலையில் 5 முறை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் முறையாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையும் சாத்தாம்பாடிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் நத்தம்-மதுரை நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பேச்சுவார்த்தை

மாணவர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி உமாமகேஸ்வரி, நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் மற்றும் போலீசார், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

பின்னர் மாணவ-மாணவிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலை, மாலை நேரத்தில் சாத்தாம்பாடி வழித்தடத்தில் முறையாக பஸ்கள் இயக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பஸ்களை முறையாக இயக்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்