58 வயது நிறைவடைந்த தமிழ் அறிஞர்கள்அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

58 வயது நிறைவடைந்த தமிழ் அறிஞர்கள் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-07 18:45 GMT

சிவகங்கை, 

58 வயது நிறைவடைந்த தமிழ் அறிஞர்கள் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.:-

உதவித்தொகை

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புபவர்கள் 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைனில்) பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று தமிழறிஞர்கள் இருவரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

31-ந் தேதிக்குள்

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ.3,500 மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் உதவித்தொகையாக வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும். நேரடியாக சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அனுப்பப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்