சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக வதந்தி

லாலாபேட்டை அருகே சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2023-03-25 18:30 GMT

காட்டு பூனை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கருப்பத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வரகூர், வேங்காம்பட்டி கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த வாரம் வரகூர் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக மர்ம நபர் ஒருவர் வதந்தி பரப்பினார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து வன அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் கால் தடயங்களை வைத்து பார்த்தபோது காட்டு பூனை என தெரிவித்து விட்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து இருந்தனர்.

சிறுத்தை புலி நடமாட்டம்?

இந்தநிலையில், நேற்று முன்தினம் வேங்காம்பட்டி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாகவும், அதனை பொதுமக்கள் பார்த்ததாகவும் தகவல் ஊர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்கள் வீடுகளுக்குள்ளேயே பீதி அடைந்து முடங்கி கிடந்தனர்.

இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் வரகூர், வேங்காம்பட்டி பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி, பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்