பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

மாணவிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டதை எதிர்த்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-08 19:13 GMT

பரமத்திவேலூர்

திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவிகள் 2 பேர் திருச்செங்கோடு பஸ் நிலையத்துக்கு வந்தனர். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் செல்ல தனியார் பஸ் ஓன்றில் ஏறி பயணச்சீட்டு கேட்டுள்ளனர். ஆனால் பஸ் கண்டக்டர், இளநகரில் பஸ் நிற்காது எனக்கூறி அந்த 2 மாணவிகளையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்திலேயே இறக்கி விட்டுள்ளார். இது குறித்து அந்த மாணவிகள் இளநகரில் உள்ள வாலிபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு வந்த பொதுமக்கள், மாணவிகளை திருச்செங்கோடு பஸ் நிலையத்திலேயே இறக்கி விட்டு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் இளநகரில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து இளநகரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்