முத்துப்பேட்டையில் கிராம மக்கள் சாலைமறியல்

முத்துப்பேட்டையில் கிராம மக்கள் சாலைமறியல்

Update: 2022-05-30 18:34 GMT

முத்துப்பேட்டை:

சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி முத்துப்பேட்டையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் பைபாஸ் சாலையிலிருந்து கீழநம்மங்குறிச்சி-பெத்தவேளாண்கோட்டகம் வரை சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 9 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கியது. ஆனால் பணிகள் இதுவரை நிறைவுபெறாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று முத்துப்பேட்டை செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையில் சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் மார்க்ஸ், ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசேகர், விவசாய சங்க தலைவர் சிவசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, செயற் பொறியாளர் வேதா, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சாலை பணி விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்