பொது ஏலம் மூலம் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை

அனைத்து நீர் நிலைகளிலும் பொது ஏலம் மூலம் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-08-28 19:18 GMT


அனைத்து நீர் நிலைகளிலும் பொது ஏலம் மூலம் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 கருவேல மரங்கள் 

வறண்ட விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்கள் மட்டுமே மானாவாரி விவசாயத்திற்கான பாசன ஆதாரங்களாக விளங்கி வருகின்றன. மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

இந்த இரு துறைகளின் கட்டுப்பாட்டிலும் இல்லாத சில கண்மாய்கள் உள்ளன. அனைத்து கண்மாய்களிலும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளன. இதுதவிர வரத்து கால்வாய்களிலும், கருவேலமரங்களின் ஆக்கிரமிப்புகளால் கண்மாய்களுக்கு நீர்வரும் பாதை தடைபட்டுள்ளது.

கோர்ட்டு உத்தரவு

இதனை தவிர அணைக்கட்டுகள், ஆறுகள், ஊருணிகள் ஆகிய நீர்நிலைகளும் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஆதலால் மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்த கண்மாய்களில் உள்ள கருவேலமர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களிலும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றங்களும் கருவேலமர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு நிலைகளில் உத்தரவிட்ட பின்பும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

நீர்வள மேம்பாடு

எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் இதற்கான நடவடிக்கை அத்தியாவசியமாக தேவைப்படும் நிலை உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள கண்மாய்களில் உள்ள கருவேல மரங்கள் பொது ஏலம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோன்று மாவட்ட நிர்வாகம் தற்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலமே கண்மாய்களில் நீர் வளத்தை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்