விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

அடிப்படை வசதிகள் கேட்டு விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-16 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் நகராட்சி 27-வது வார்டு சிந்தாமணி நகர் பகுதியில் வடிகால் வசதியுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். வார்டு முழுவதும் எரியாத தெரு மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டு நகர மன்ற உறுப்பினர் சிங்காரவேல் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த நகராட்சி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகரமன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்