மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மறியல் போராட்டம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2023-02-16 21:03 GMT

மறியல் போராட்டம்

திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று சி.ஐ.டி.யு. மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தின்போது, ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். 1998-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பணி புரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கே 2 ஒப்பந்தத்தில் பணிபுரியும் மற்றும் தானே வர்தா, கஜா, ஓக்கி புயல் பாதிப்பின்போது பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி ஒப்பந்தம் காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

100 பேர் கைது

பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் கென்னடி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, 100 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை கல்லுக்குழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்களை விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்