தேசியக்கொடியுடன் நக்கீரர் சிலையிடம் மனு

பொதுப்பாதையை சீரமைக்கக்கோரி தேசியக்கொடியுடன் நக்கீரர் சிலையிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-09-12 19:09 GMT

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் அம்புலிஆறு அணைக்கட்டிலிருந்து சேந்தன்குடி, நகரம், கீரமங்கலம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் வரும் அன்னதானக் காவிரி கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில் கால்வாய்க்கு தெற்கு பக்கம் உள்ள வீடுகள், தோட்டங்களுக்கு செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது. அதனால் கால்வாயின் தெற்கு கரையில் பாதை அமைத்துத் தரக்கோரி சேந்தன்குடியை சேர்ந்த பள்ளி மாணவன் இனியவன் அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தான். இந்த நிலையில், அதிகாரிகள் தற்காலிகமாக கால்வாய் கரையில் பாதை அமைத்து கொடுத்தனர். அந்தப் பாதை மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பொதுப்பாதை சீரமைக்கப்படாததால் வீட்டிற்கும் பள்ளிக்கும் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் தற்காலிக பாதையை சீரமைத்து தரக்கோரி நேற்று காலை கீரமங்கலத்தில் உள்ள புலவர் நக்கீரர் சிலையிடம் தேசியக் கொடி ஏந்தி வாயில் துணியை கட்டிக் கொண்டு மாணவன் ஊர்வலமாகச் சென்று மனு கொடுத்தார். ஊர்வலத்தில் தே.மு.தி.க., பா.ஜ.க. உள்பட பல கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பஸ் நிலையம் அருகே மரத்தடியில் தேசியக் கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்