நாகை மாவட்ட மக்கள் அச்சம் அடைய தேவை இல்லை

காரைக்காலில் காலரா பரவி வருவதால் நாகை மாவட்ட மக்கள் அச்சம் அடையே தேவையில்லை என்றும், நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-04 14:05 GMT

காரைக்காலில் காலரா பரவி வருவதால் நாகை மாவட்ட மக்கள் அச்சம் அடையே தேவையில்லை என்றும், நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

காலரா பரவல்

காரைக்கால் மாவட்டத்தில் காலரா பரவி வருவதால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் காலரா பரவி வருவதால் அருகில் உள்ள நாகை மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நாகையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காரைக்காலுக்கு சென்று வருகின்றனர். இதனால் நாகை மாவட்ட மக்களுக்கும் காலரா பரவ வாய்ப்பு உள்ளது எனவும், இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது படுக்கை வசதிகள், கழிவறை வசதிகள், ஸ்கேன், தீவிர சிகிச்கை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் ஆஸ்பத்திரியை பராமரிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அச்சம் அடைய தேவை இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் காலரா பரவி வருவதால் நாகை மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுடு தண்ணீரையே குடிக்க வேண்டும்.

உணவு பொருட்களை நன்கு கழுவி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். காரைக்காலில் காலரா பரவி வருவதால் நாகை மாவட்ட மக்கள் பீதி அச்சம் தேவையில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காலரா நோயை கட்டுப்படுத்த போதுமான மருந்துகள் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்