தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் ஒரே நாளில் 1008 சேமிப்பு கணக்குகள் தொடக்கம்

தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் ஒரே நாளில் 1008 சேமிப்பு கணக்குகள் தொடக்கம்

Update: 2022-07-21 19:55 GMT

தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் நடந்த மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட சிறப்பு முகாமில் ஒரே நாளில் 1008 கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்த முகாமில் திருச்சி மத்திய மண்டல தலைவர் கலந்து கொண்டார்.

சிறப்பு முகாம்

இந்தியாவின் 75-வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் வகையில் மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் திருச்சி மத்திய மண்டல தபால்துறை சார்பில் தஞ்சை கோட்டத்தில் அகவை 60 அஞ்சல் 20 என்ற மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது.

இதன் சிறப்பு முகாம் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடந்தது. முகாமில் திருச்சி மத்திய மண்டல தபால்துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் கலந்து கொண்டு மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கான சிறப்பு லோகோவை வெளியிட்டார். இதில் மண்டல இயக்குனர் ரவீந்திரன், முன்னிலை வகித்தார். தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

ஒரே நாளில் 1008 கணக்குகள்

இந்த திட்டம் குறித்து திருச்சி மத்திய மண்டல வணிக வளர்ச்சி உதவி இயக்குனர் கலைவாணி கலந்து கொண்டு பேசினார். விழாவில் புதிதாக கணக்கு தொடங்கியவர்களுக்கு பாஸ்புத்தகமும் வழங்கப்பட்டது. முடிவில் தஞ்சை தலைமை தபால் நிலைய அதிகாரி அருள்தாஸ் நன்றி கூறினார். திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள 24 தலைமை தபால் நிலையங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடந்தது.

சிறப்பு முகாம் குறித்து தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தஞ்சை கோட்டத்தில் உள்ள 86 தபால் நிலையங்களின் மூலம் இந்த சேமிப்பு திட்டத்தில் 3 ஆயிரம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தஞ்சை தலைமை தபால் நியைத்துக்கு மட்டும் 500 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 1008 பேர் சேர்க்கப்பட்டு கணக்கு தொடங்கப்பட்டது. இதில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தனியாகவும், அல்லது வாழ்க்கை துணையோடும் கூட்டாக கணக்கு தொடங்கலாம்.

முதிர்வு காலம் 5 ஆண்டுகள்

55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் விருப்ப ஓய்வு பெறுபவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 30 நாட்களுக்குள் கணக்கை தொடங்கலாம். இதில் வைப்புத்தொகை ரூ.1000 முதல் ரூ.15 லட்சம் வரை ஆகும். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

----------


Tags:    

மேலும் செய்திகள்