விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் கலெக்டர் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-13 19:00 GMT


விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சிலைகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

அதில், கீழ்கண்ட நடைமுறைகளை அரசின் அறிவுரையின்படி பொதுமக்கள் கடைபிடித்திடல் வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

ரசாயனம்

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத, ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட இடங்கள்

மேலும், விநாயகர் சிலைகளை சிவகங்கை தெப்பக்குளம், மானாமதுரை ஆலங்குளம், இளையான்குடி சாலைகிராமம் டேங்க், காரைக்குடி சிவன்கோவில் ஊருணி, தேவகோட்டை சிலம்பனி ஊருணி மற்றும் சிங்கம்புணரி ஊருணி என அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்