மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி படுகாயம்
மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
உத்தரபிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் உம்ராவ். இவரது மகன் ராம்குமார் (வயது 25). இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து ஒப்பந்த கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரத்தில் எரிவாயு விற்பனை செய்யும் நிலையத்தின் சுற்றுச்சுவர் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அதிக மின்னழுத்த மின்சார கம்பியில் அவரது கைப்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி ராம்குமார் படுகாயமடைந்தார். இதனைக்கண்ட சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.