தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை- மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.

Update: 2023-09-17 19:53 GMT


தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.

சட்டவிரோதம்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும், காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வது சட்டவிரோதம். காவிரி பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பின்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த நீர் பத்தாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். ஆனால் அதன்பின் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு வழங்கிய நீரை குறைத்து பெங்களூருக்கு கூடுதலாக நீர் வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு வழக்கு தொடுத்து, 172 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை உறுதிப்படுத்த காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அழைப்பு வரவில்லை

அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் தான் உச்சநீதிமன்றம் எடுத்து சென்று இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்தார். காவிரி நீர் முறைப்படுத்தும் ஆணையம் அமைக்க வேண்டும் என ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதனையும் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். இதுபோல், காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்ததற்கு, நீண்ட நெடிய வரலாறு உள்ளது. போராடி பெற்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்று கர்நாடக அரசு சொன்னால் இந்திய அரசியல் சட்டத்தை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தி.மு.க. அரசு இதை முறையான சட்டப் பிரச்சினை மூலமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ துரித நடவடிக்கை எடுத்து ஜெயலலிதா பெற்று தந்த நீரை தர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை. சசிகலாவை தற்போது வரை பார்க்கவில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். புரட்சிப் பயணம் மீண்டும் தொடரும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்