"இளையநிலா பொழிகிறதே" கிடார் இசைக்கலைஞர் சந்திரசேகர் மறைவு: இளையராஜா இரங்கல்

தமிழ் சினிமாவின் பிரபலமான கிடார் இசைக்கலைஞராக திகழ்ந்த சந்திரசேகர் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-09 09:37 GMT

சென்னை,

பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றிய சந்திரசேகர், பிரபல டிரம்மர் இசைக்கலைஞர் புருஷோத்தமனின் அண்ணன் ஆவார். இவர்கள் இருவரும் இளையராவின் இசையில் பல படங்களில் இசைக் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர். மூன்று முடிச்சு படத்தில் இடம் பெற்ற "வசந்தகால நதிகளிலே" பாடலில் மவுத் ஆர்கன் வாசித்தும், பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற "இளையநிலா பொழிகிறதே" பாடலில் கிடார் இசை வாசித்தும் ரசிகர்களிடையே சந்திரசேகர் புகழ் பெற்றார்.

1995 ஆம் ஆண்டு முதல் 2000 பல விளம்பர படங்களுக்கு பணியாற்றிய சந்திரசேகர், தமிழ் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். அவரது மறைவு செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இசைப் பிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் சந்திரசேகர் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு வீடியோவில், "என்னுடன் பணியாற்றிய எனக்கு மிகவும் பிரியமான இசைக் கலைஞரான சந்திரசேகர் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர் என்னிடம் பணியாற்றிய புருஷோத்தமனின் சகோதரர் ஆவார். நாங்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் மேடையில் இருந்து திரைக்கு வந்த இசைக்கலைஞர்கள் . நிறைய பாடல்களில் அவர் வாசித்திருக்கிற கிட்டார் உள்ளிட்ட இசைக் கருவிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என இளையராஜா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்