கிருஷ்ணகிரியில் பயங்கரம்:கட்டிட மேஸ்திரி சரமாரி குத்திக்கொலைநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2023-01-26 18:45 GMT

கிருஷ்ணகிரியில் கட்டிட மேஸ்திரியை சரமாரியாக குத்திக்கொலை செய்தது தொடர்பாக அவருடைய நண்பர் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கட்டிட மேஸ்திரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள பொன்மலை சீனிவாசப்பெருமாள் கோவில் தண்ணீர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் வெள்ளையன் என்கிற லோகநாதன் (வயது 25). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காலை தனது வீட்டுக்கு அருகே சாலையோரத்தில் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வெள்ளையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

எருதுவிடும் விழா

கட்டிட மேஸ்திரி வெள்ளையனும், கிட்டம்பட்டியை சேர்ந்த ஒருவரும் நண்பர்கள் ஆவர். அந்த பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதுவிடும் விழா நடந்தது. அப்போது வெள்ளையனுக்கும், நண்பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் வெள்ளையன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் வெள்ளையன் கொலைக்கும், கிட்டம்பட்டியை சேர்ந்த அவரது நண்பருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்