உறுப்பினர்கள் மக்களுக்கு தேவையான பணிகளை கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும்

உறுப்பினர்கள் மக்களுக்கு தேவையான பணிகளை கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும்

Update: 2022-07-23 18:16 GMT

கொரடாச்சேரி

உறுப்பினர்கள் மக்களுக்கு தேவையான பணிகளை கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் துணைத்தலைவர் பாலச்சந்தர் கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் துணைத் தலைவர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் கலியபெருமாள், ஆணையர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன், பொறியாளர்கள் ரவீந்திரன், சசிரேகா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-

பாஸ்கர் (அ.தி.மு.க.): ஒன்றியத்தில் பல இடங்களில் கருவேலம் மரம் வளர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே கருவேல மரங்களை பொக்லின் எந்திரம் முலம் அப்புறப்படுத்த வேண்டும்.

நாகூரான் (அ.தி.மு.க.): அபிவிருத்தீஸ்வரம் படித்துறை மற்றும் வெட்டாற்றில் 3 படித்துறை கட்டியதற்கு நன்றி. உத்தரங்குடிக்கு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வேண்டும். மேல உத்தரங்குடி சாலையை சீரமைக்க வேண்டும்.

பள்ளிக்கு கழிவறை வசதி

ஏசுராஜ் (அ.தி.மு.க.): வண்டாம்பாளையம் படித்துறை அமைத்து கொடுத்ததற்கு நன்றி. எங்கள் பகுதியில் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டாம்பாளையம் பள்ளிக்கு கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

வாசு (தி.மு.க.): காட்டூருக்கு சத்துணவு கூடம் அமைக்க வேண்டும். காட்டூர் வடக்கு தெருக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.

கவிதா (இ.கம்யூ): அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும். மருந்தாளுநரை பணி நியமனம் செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக நடைபெறுகிறது.

மீரா(அ.தி.மு.க.): மேல பருத்தியூர் பள்ளி பழுதடைந்து மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். கண்கொடுத்தவனிதம் மயானத்திற்கு செல்ல சாலை வசதியில்லை. வயல் வழியாக தான் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் நிலை உள்ளது. எனவே மயானத்திற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

மாநிலத்தில் சிறந்த ஒன்றியமாக

உமாமகேஸ்வரி (தி.மு.க.): கமலாபுரம் அக்ரகார சாலையை சீரமைக்க வேண்டும். தாழைக்குடி பள்ளியில் கழிவறை வசதி செய்து தர வேண்டும்.

துணைத்தலைவர்: அனைத்து பணிகளும் நிதி ஆதாரத்தை வைத்து படிப்படியாக நிறைவேற்றப்படும். உறுப்பினர்கள் மக்களுக்கு தேவையான பணிகளை கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும். சாலைகளில் இருபுறங்களிலும் உள்ள காட்டு கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மாநிலத்தில் சிறந்த ஒன்றியமாக வர அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்