தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில் சி.வி.சண்முகம் எம்.பி , மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், “மக்களுக்காக பாடுபடுகின்றவர்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். மனைவி கிருத்திகாவுடன் வந்த உதயநிதி ஸ்டாலின் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினார்.
ஜனநாயக கடமையாற்றிய உலகின் உயரம் குறைவான பெண்....
மும்பை,
நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. காலை முதலே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், உலகில் உயரம் குறைவான பெண் என்ற சாதனைக்கு சொந்தமான 30 வயதாகும் ஜோதி அம்கே, மராட்டிய மாநிலம் நாக்பூரில் தனது வாக்கினை செலுத்தினார்.
உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் ஜோதி அம்கே. 62.8 செ.மீ. உயரம் மட்டுமே உள்ள இவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் வசித்து வருகிறார்.
சென்னையில் வாக்களித்த நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கங்களில் #Vote4INDIA என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
காலை 9 மணி நிலவரம்
முதல் கட்ட தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 12.66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், திரிபுராவில் 15.21 சதவிகிதம், உத்தரகாண்ட் -10.54 சதவிகிதம், பீகார்- 9.23 சதவிகிதம், சத்தீஷ்கர் -12.02 சதவிகிதம், அசாம்-11.15 சதவிகிதம், மத்திய பிரதேசம் -15 சதவிகிதம், மணிப்பூர்-10.76 சதவிகிதம், ஜம்முகாஷ்மீர்-10.43 சதவிகிதம் சிக்கிம்-7.90 சதவிகிதம், அருணாசல பிரதேசம்-6.44 சதவிகிதம்’ வாக்குகள் பதிவாகியுள்ளன.