12 பேர் பலியான விவகாரம்:விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் விற்ற 55 பேர் கைதுபோலீசார் அதிரடி

விஷ சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரத்தை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராயம் விற்ற 55 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-15 18:45 GMT


மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்தவர்களில் 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 39 பேர், வெவ்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் முடுக்கி விடப்பட்டு சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

55 பேர் கைது

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையின்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சாராயம் விற்பனை செய்ததாக 57 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 55 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 109 லிட்டர் சாராயம் மற்றும் 428 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்