டாக்டர்கள், வக்கீல்கள் போல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை கொண்டு வந்தார். மாணவர்களிடம் சமத்துவ உணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால் அத்திட்டம், பலவித பரிணாமங்களை பெற்று நடைமுறையில் இருக்கிறது.

Update: 2022-11-22 18:48 GMT

ஆடை கட்டுப்பாடு

பல வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் சீருடை முறை பின்பற்றப்படுகிறது. தங்கள் நிறுவன பணியாளர்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதுபோல் டாக்டர்கள் வெள்ளை நிறத்திலும், வக்கீல்கள் கறுப்பு நிறத்திலும் கோட்டு அணிவதும் அதற்காகத்தான்.

சில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. சிலநேரங்களில் இதனால் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

ஜன்னல் வைத்த ஜாக்கெட்

2008-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆடைக்கட்டுப்பாட்டில் சில உத்தரவுகளை பேராசிரியர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர். 2009-ம் ஆண்டு பள்ளி ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டோ, மெல்லிய உடைகளோ அணிந்து வர தடைவிதிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின. 2018-ல் ஒடிசா மாநில பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை அணிந்து வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டில் கேரளாவில் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியைகள் சேலை அணிந்துவர கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பின்னர், கேரள கல்வித்துறை அமைச்சகம் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று கூறி அந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேல் அங்கி அணிய வேண்டும்

தற்போது தமிழக உயர்கல்வித் துறைக்கு, வந்த ஒரு புகார் மனு அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரிக்கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உயர்கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கை உத்தரவா? அல்லது யோசனையா? புகார் மீதான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருக்கிறதா? என்பது எல்லாம் புரியாத புதிராக இருக்கின்றன. அதை உயர்கல்வித்துறை தெளிவுப்படுத்த வேண்டும். இருப்பினும், உயர்கல்வித்துறை கூறி இருப்பது போல், கல்லூரி பேராசிரியர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு என்பது அவசியமானதா?, அதை நடைமுறைப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து பேராசிரியர்கள், பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

புதிய முயற்சியாக இருக்கும்

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் பி.திருநாவுக்கரசு கூறுகையில், 'கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சில ஆசிரியர்களின் உடைகள் சரியில்லாமல்தான் இருக்கிறது. அனைவரையும் சொல்லவில்லை. உயர்கல்வித்துறை பரிந்துரைத்துள்ள மேல் அங்கி அணிவது என்பது சற்று அதிகம் தான். ஆசிரியர்களை பார்த்தால் ஒரு மரியாதை வரவேண்டும். அதற்கேற்றாற்போல் கண்ணியமான உடை அணிவது அவசியமான ஒன்று. நான் பணிபுரியும் கல்லூரியில் சீருடை இருக்கிறது. ஆகவே எங்களுக்கு அந்தப்பிரச்சினை இல்லை. இதை எங்கள் கல்லூரி பாரம்பரியாக செய்து வருகிறது. அனைவரையும் இதேபோல் பின்பற்றச் சொல்லவில்லை. அதேநேரத்தில் சரியான உடையை அணிந்தால் நல்லது. ஆசிரியரை பார்த்து, மாணவர்களும் அதேபோல் வரவேண்டும். அதற்கேற்றபடி ஆசிரியர்கள் உடை அணிவது சரியாக இருக்கும்' என்றார்.

பாதுகாப்பான உடை

கரூரை சேர்ந்த ஆங்கிலத்துறை, உதவி பேராசிரிைய சிவகாமி:-

'மேல் அங்கி' அணியும்போது பெண்ணாகவும், பேராசிரியராகவும் எங்களுக்கு பாதுகாப்பாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது. பாடம் நடத்தும்போது நம்பிக்கை அதிகரித்து, எங்களது மனநிலை மாறாமல் பாடம் எடுப்பதில் மட்டும் கவனம் இருக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பான உடையாக இருக்கிறது. பாடம் நடத்தும் போது மற்றவைகள் பற்றி கவலைப்படாமல் பாடத்தை நடத்தலாம். மாணவர்களின் மனநிலையும் மாறாமல், பாடத்தை மட்டும் கவனித்து, கவன சிதறல் ஏற்படாமல் இருக்கும். ஓவர்கோட் அணிவது முழுமையான பாதுகாப்பாக இருக்கும். எங்களது கல்லூரியில் ஓவர்கோட் அணிவதை கடந்த 14 ஆண்டுகளாக செய்து வருகிறோம். ஓவர்கோட் அணிவதை அரசு கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. பெண்களாகிய எங்களை நாங்கள் பாதுகாப்பதற்கும் உதவிகரமாக இருக்கிறது. எங்களது கல்லூரியில் ஓவர்கோட் அணியாமல் நாங்கள் வகுப்பறைக்கு செல்லமாட்டோம். செல்லவும் அனுமதி கிடையாது. இது எங்களது மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கும். பேராசிரியர்கள் என்றால் இப்படிதான்தான் இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. ஓவர்கோட் அணிவது கல்லூரியில் மாணவர்கள், பேராசிரியர்கள் என வித்தியாசப்படுத்தி காட்டுவதற்கும் உதவுகிறது.

மகளிர் கல்லூரி

பண்டுதகாரன்புதூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் பேராசிரியை சீதா:- தமிழக அரசு தற்போது தான் பேராசிரியைகளுக்கு 'மேல் அங்கி' அணிந்து பாடம் நடத்த வேண்டும் என்று உடை கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. ஆனால் தமிழக அரசு அறிவிப்பதற்கு முன்பே எங்களது கல்லூரியின் தலைவர் மற்றும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி நாங்கள் அனைவரும் 'மேல் அங்கி' அணிந்துதான் மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறோம். எங்களது கல்லூரி மகளிர் கல்லூரி. இருந்தாலும் 'மேல் அங்கி' அணிவதால் எங்களால் வகுப்பில் எந்த ஒரு தடையும் இன்றி, அச்சமும் இன்றி பணியாற்ற உதவுகிறது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆசிரியைகளுக்கு பாதுகாப்பானது

புன்னம் சத்திரம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை ஆசிரியை கிரிஜாஸ்ரீ:- தமிழக அரசு கல்லூரிகளில் பேராசிரியைகளுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு பிறப்பித்தது சரியானதுதான். ஆடை கட்டுப்பாடு ஆசிரியைகளுக்கு பாதுகாப்பானது. ஓவர் கோட் போடுவது நல்லது. பெண்கள் கல்லூரியில் ஆசிரியைகளுக்கு ஓவர் கோட் தேவையில்லை. இருப்பினும் அரசின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும். ஆதலால் தமிழக அரசின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். சேலை கட்டிக்கொண்டு பாடம் நடத்தும் போது ஒருவித அச்சம் இருக்கத்தான் செய்யும். அதனால் அச்சமின்றி பாடம் நடத்த ஆசிரியைகள் ஓவர் கோட் அணிவது அவசியம் தான்.

வரவேற்கக் கூடிய திட்டம்

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் சுபத்ரா:-

ஆசிரியர் பணி என்பது மாணவர்களை சீர்படுத்தி அவர்களை சிறந்த மாணவர்களாக, சிறந்த மனிதனாக, சமூகத்திற்கும், நாட்டிற்கும் உருவாக்கும் மாபெரும் பணி‌. இந்த நிலையில் தற்போது கல்லூரி பேராசிரியர்கள் 'மேல் அங்கி' அணிவது தொடர்பாக கொண்டு வர உள்ள திட்டம் நல்ல எதிர்காலத்தை, சிறந்த சமுதாயத்தை படைக்கும் பொறுப்பை கொண்டுள்ள ஒவ்வொரு ஆசிரியர்களும் வரவேற்கக் கூடிய திட்டமாகும். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

புன்னம் சத்திரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி இலக்கியா:- ஆசிரியைகள் ஓவர் கோட் அணிந்து பாடம் நடத்தும் போது அவர்கள் நல்ல முறையில் பாடம் நடத்த முற்படுவார்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம்.

பண்டுதகாரன் புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி சபியா:- எங்கள் கல்லூரியில் ஆரம்பத்திலிருந்து ஆசிரியர்களும் பேராசிரியர்களும் ஓவர் கோட் அணிந்து தான் எங்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். ஓவர் கோர்ட் அணிவதால் ஆசிரியைகள் அச்சமின்றி பாடம் நடத்துவார்கள். தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஆடை கட்டுப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்.

அச்ச உணர்வு

பெற்றோர் சுப்ரமணியன்:- கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியைகள் சேலை அணிந்து கொண்டு பாடம் நடத்தும் போது மிகுந்த அச்சத்துடன் கல்வியை புகட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் மேல்அங்கி அணிந்து பாடம் நடத்தும் போது எந்த ஒரு அச்ச உணர்வும் இன்றி பாடம் நடத்துவார்கள். தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

உடனடியாக செயல்படுத்த வேண்டும்

அமுதா:- கல்லூரிகளில் ஆசிரியைகள் பாடம் நடத்தும் போதும், கரும்பலகையில் எழுதும் போதும் அச்ச உணர்வுடன் இருப்பார்கள். மேல்அங்கி அணிந்து பாடம் கற்பிப்பதால் இது போன்ற பிரச்சினை இருக்காது. எப்போதுமே பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஆடை கட்டுப்பாடு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கடந்த 2015-ல் அரசு பள்ளியில் ஆசிரியைகள் மேல் அங்கி அணிய வேண்டும் என்ற உத்தரவு வந்தது. அதன்படி, மதுரை பேரையூர் தாலுகாவில் உள்ள வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மேல் அங்கி அணிந்து வருவது அப்போது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் அது காலப்போக்கில் மாறியது. அதேபோல், தற்போது உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டது போன்ற ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வருமா? அல்லது அது வெறும் சுற்றறிக்கையாகவே போய்விடுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்