குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லை; அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?- தேர்வர்கள் கருத்து

குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லை; அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?- தேர்வர்கள் கருத்து

Update: 2022-12-25 21:16 GMT

'காத்துட்டா இருந்தாலும், அது கவர்மெண்ட் துட்டா இருக்கணும்', 'அரசாங்க உத்தியோகம்னா, சும்மாயில்லே?'

-இது போன்ற வாய்மொழிகள் இன்னமும் கிராமங்களில் வலம் வருகின்றன.

பணி பாதுகாப்பு, சுதந்திரம், கணிசமான சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்பு, ஓய்வு ஊதியம் போன்ற காரணிகளே, பொதுவாக ஒருவரை அரசு வேலைக்கு ஈர்ப்பதாகப் பார்க்கப்படுகிறது.

ஒருகாலத்தில் அரசுத் துறைகளில் இருக்கும் பணிகளுக்கு ஆட்களை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலப்போக்கில் கல்வியறிவு அதிகரித்து, படித்து முடிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.

டி.என்.பி.எஸ்.சி.

அதன் பின்னர், தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியில் சேர்க்கும் முறை கடந்த 1929-ம் ஆண்டு வாக்கில் இருந்து தொடங்கி இருக்கிறது. முதலில் இந்த அமைப்புக்கு மெட்ராஸ் தேர்வாணையம் என்ற பெயர் இருந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, 1957-ம் ஆண்டில் மெட்ராஸ் அரசு பணியாளர் தேர்வாணையம் என்றும், அதனைத் தொடர்ந்து, சென்னை மாகாணம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) என்றும் மாறியது.

1954-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை மற்றும் நடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆணையம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாகவே அரசுத்துறைகளில் அடிமட்ட அளவில் இருந்து உயர்மட்ட அளவில், பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 என பிரிவுகளாக பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களை கொண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத்திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதிவாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது.

தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறுக்குப் பாதைகளை தேடுபவர்கள் எங்கேதான் இல்லை? என்று சொல்லும் வகையில், இந்தத் தேர்வு முறைகளிலும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது என்பது, மறுக்க முடியாத உண்மை.

வயது விலக்கு

அந்த சுவடுகள் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. மீது பதிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதனை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்லும் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது அதுபோன்ற முறைகேடுகள் பற்றிய எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுத்துவிடாதபடி, ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வை நடத்தி வருகின்றனர்.

இதில் குரூப்-4, குரூப்-2, 2ஏ ஆகிய பிரிவுகளில்தான அதிகமான பணியிடங்களும் இருக்கும் அதிகமான போட்டிகளும் இருக்கும்.

உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இது பெருமையா? என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேர் காத்துக்கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாததால், அதிகபட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்காக, 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளை பெற்றவர்களுக்கு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களில் தேர்வு ஆகுதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

அதிர்ச்சி அளிக்கிறது

அப்படி எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு, டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆண்டுத்திட்ட போட்டித் தேர்வு அட்டவணை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய குரூப்-2, 2ஏ, 3ஏ பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாதது, குரூப்-4 பணியிடங்களுக்கான காலி இடங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன.

குரூப்-1தேர்வுக்கு ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பரில் முதல் நிலை, 2024 ஜூலையில் முதன்மை, டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எத்தனை பணியிடங்கள் என்ற விவரங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டுகளில் இருந்து பார்க்கும்போது, ஆண்டுக்கு 23 ஆயிரம், 10 ஆயிரம், 9 ஆயிரம், 8 ஆயிரம் காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சோளப்பொரி

இது யானைப் பசிக்கு சோளப்பொரி போல் அல்லவா தெரிகிறது? வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக் கணக்கானோருக்கு, ஆயிரத்தில் பணியிடங்கள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

அதிலும் இந்த ஆண்டு அறிவிப்பில் இதுவரை 1,754 காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையில் இடம்பெற்றிருப்பது, அரசுப் பணிகளில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

இதுபற்றி தேர்வுக்கு தயாராகிவரும் தேர்வர்களிடமும், பயிற்சி மையம் நடத்துபவரிடமும் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

அதிர்ச்சி

இதுகுறித்து சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் சத்யா கூறியதாவது:-

கொரானா பெருந்தொற்று காரணமாக கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் எந்த அரசுப்பணி தேர்வும் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகள் நடத்தப்பட்டது. அவைகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. 2023-ம் ஆண்டு நடத்தப்பட இருக்கும் குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கான போட்டித்தேர்வர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் தேர்வாணையம் வெளியிட்ட ஆண்டு தேர்வு திட்டம் அவர்களது எதிர்பார்ப்புக்களை அடியோடு தகர்த்திருக்கிறது.

வெறும் 1,700 பணியிடங்களை மட்டுமே நிரப்பப்போவதாக கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும் லட்சக்கணக்கானோர் பங்குபெறும் குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நடத்தப்படாது என்பது அதிருப்தியை பரவவிட்டுள்ளது.

ஆட்சி மாற்றம்

இத்தனைக்கும் தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 4 லட்சத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமைச்செயலகத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒட்டு மொத்தமாக 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 2001 முதல் 2005-ம் ஆண்டு காலகட்டங்களில் பணிநியமன தடைச்சட்டத்தின் மூலம் பெருவாரியான போட்டித்தேர்வர்கள் பங்குபெறும் மேலே குறிப்பிட்ட தேர்வுகள் நடத்தப்படவில்லை.

டி.என்.பி.சி. தேர்வு மூலம் அதிகப்படியானவர்களுக்கு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டுதோறும் நடத்தவேண்டும்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகிவரும் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

ஹேமபிரியா:- 'நான் பி.ஏ. பி.எட். முடித்திருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக குரூப் -2 தேர்வுக்காக படித்து வருகிறோம். ஆனால் இந்த முறை வெளியிடப்பட்டு இருக்கும் அட்டவணை அதிர்ச்சியைத்தான் தந்திருக்கிறது. குரூப்-2, 2ஏ, 3ஏ பிரிவுகளில் புதிய அறிவிப்புகள் இல்லை. எனவே இந்த ஆண்டு தேர்வே இல்லாதது போலவே தெரிகிறது.

என்னைப்போல் ஏராளமானோர் குரூப்-2 தேர்வுக்காக தயாராகி வருகிறார்கள். ஆண்டுதோறும் குரூப் -2 தேர்வை நடத்தினால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு தேர்வை நடத்தவில்லை என்றால் அடுத்த ஆண்டு மேலும் போட்டி கடுமையாக இருக்கும். மேலும் தேர்வுக்கு தயாராகுவதில் பலருக்கு விருப்பம் இல்லாமல் போய்விடும். இதை கருத்தில் கொண்டு டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்' என்றார்.

குறைவான காலிப்பணியிடங்கள்

சரத்:-'நான் தற்போது பி.இ. 4-ம் ஆண்டு படித்து வருகிறேன். இந்த ஆண்டுடன் எனது படிப்பு நிறைவடைய உள்ளது. நான் யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக கடந்த 2 மாதங்களாக தீவிரமாக தயாராகி வருகிறேன். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) எவ்வாறு திட்டமிட்டு ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் தேர்வை நடத்தி முடிவுகளை வெளியிடுகிறதோ அதேபோல் டி.என்.பி.எஸ்.சி.யும் தேர்வுகளை நடத்தி அறிவிக்க வேண்டும்.

அப்போது தான் அதில் பணி கிடைக்காவிட்டாலும் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் கவனம் செலுத்த ஆர்வம் இருக்கும். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் 2 ஆயிரத்துக்கும் குறைவான காலிப்பணியிடங்களே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்' என்றார்.

ஏமாற்றம்

தேவதர்ஷினி:- 'நான் பி.எஸ்சி. படித்து முடித்துவிட்டு கடந்த மே மாதம் நடந்த குரூப் -2 தேர்வை எழுதினேன். அதில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் தொடர்ந்து குரூப்-2 தேர்வுக்காக படித்து வருகிறேன். மாநகராட்சி ஆணையாளர் ஆவது எனது விருப்பம். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்வேன்.

2023-ம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணையில், குரூப்-2, 2ஏ-க்கான புதிய அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. அறிவிக்கும் தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். எனவே தேர்வர்களின் நிலையை புரிந்து கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வை நடத்தி அதிகப்படியானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்' என்றார்.

நேர்முகத்தன்மை

விக்னேஸ்வர்:- 'நான் கடந்த 3 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காக படித்து வந்தேன். குரூப் -1 தேர்வை ஒரு முறையும், குரூப்-4 தேர்வை 2 முறையும் எழுதி உள்ளேன். இதில் தேர்ச்சி பெறாததால் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். டி.என்.பி.எஸ்.சி. தேர்வை பொறுத்தவரை பணம் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். எனவே தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி. தேர்வை நேர்முகத்தன்மையுடன் நடத்த வேண்டும்.

குரூப்-1 தேர்வை எழுத வேண்டும் என்றால் முதலில் முதல் நிலை தேர்வு, 2-வது மெயின் தேர்வு, 3-வது நேர்முக தேர்வு என 3 தேர்வுகள் எழுத வேண்டி உள்ளது. இந்த 3 தேர்வுகளையும் எழுதி முடிக்க ஒரு ஆண்டுகள் ஆகிறது. பின்னர் பணிநியமன ஆணை கிடைக்க மேலும் ஒரு ஆண்டு என மொத்தம் 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நீண்ட இடைவெளி முறைகேடுக்கு வழிவகுக்கும் என்பதால் தேர்வுகளை விரைந்து முடித்து உடனடியாக பணிநியமன ஆணை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைவாய்ப்பில் பாதிப்பு

கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறவில்லை. இதனால் ஏராளமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மேலும் தற்போது ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில் டி.என்.பி.எஸ்.சி.யின் தற்போது அறிவிப்பு பட்டதாரிகளிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அதிகப்படியான தோ்வுகளை நடத்தி பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்