வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை இந்தியா கூட்டணி வேடிக்கை பார்க்கிறது - வானதி சீனிவாசன்

வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Update: 2024-08-07 15:10 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வங்காளதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, பெரும் கலவரம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்காளதேசம் இன்று தனி நாடாக இருந்தாலும், 1947-ல் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்தியாவை பிளக்க நினைத்த ஆங்கிலேயர்கள், முதலில் வங்கத்தை தான் பிரித்தார்கள். அப்படி பிரிக்கப்பட்ட ஒரு பகுதியான மேற்கு வங்கம் நம்மிடம் இருக்கிறது. கிழக்கு வங்கம் பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது. பிறகு அது வங்காளதேசம் என்ற தனி நாடானது.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததுடன் நாட்டை விட்டே ஷேக் ஹசீனா வெளியேறியிருக்கிறார். ஆனாலும், அங்கு கலவரங்கள் ஓயவில்லை. மேலும் தீவிரமடைந்து இருக்கிறது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராடி வந்தவர்கள், இப்போது அங்கு வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்களை குறி வைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து கோவில்கள், இந்துக்களின் சொத்துகள் சூறையாடப்படுகின்றன. பல்வேறு கோவில்கள் எரிக்கப்பட்டுள்ளன. இஸ்கான் கோவில் தாக்கப்பட்டு, அங்குள்ள 'பகவத் கீதை' உள்ளிட்ட புனித நூல்கள் எரிக்கப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. தங்கள் நாட்டுக்குள் புகுந்து, ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், தொடர்ந்து ஆயுத தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றதும், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நமது அண்டை நாடான, 1947-க்கு முன்பு நம் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசத்தில், மண்ணின் மைந்தர்களான இந்துக்கள் தாக்கப்படுவது குறித்தும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் எரிக்கப்படுவது குறித்தும், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. இந்துக்களின் உயிரும் உடைமைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக, 'மனிதம் மரத்துப் போய் விட்டதா?' என்று கேள்வி எழுப்பி நீண்டதொரு அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு, இப்போது வங்காளதேச இந்துக்களுக்கு குரல் கொடுக்க மனமில்லை.

காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பது தான் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் பாரம்பரியம். எல்லாம் வாக்கு வங்கி படுத்தும்பாடு. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்