காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-10 18:45 GMT

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டெருமைகள்

வால்பாறை வனப்பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் சகஜமாக உலா வருவதை காண முடிகிறது. குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் இருந்து அப்பர் பாரளை எஸ்டேட் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பட்டப்பகலில் காட்டெருமைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் குட்டிகளுடன் காட்டெருமைகள் சாலையை கடந்து சென்றது. இதனால் வால்பாறை வனச்சரக வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டெருமை குட்டிகள் சாலையை கடந்து செல்லும் வரை போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர்.

எச்சரிக்கை

இதேபோன்று வால்பாறையில் இருந்து சிங்கோனா, பெரியகல்லாறு, சின்னக்கல்லாறு, வில்லோணி ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலைகளிலும் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே இரவில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் சாலையை கடந்து செல்லும் காட்டெருமைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது, வாகனங்களை காட்டெருமைகளுக்கு அருகில் கொண்டு சென்று ஹாரன் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்