கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கணவர், உறவினர்கள் தர்ணா

கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அவரது கணவர், உறவினர்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தர்ணாவில் ஈடுபட்டு, சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-28 19:24 GMT

அறுவை சிகிச்சை

பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி பத்மாவதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக கடந்த 19.9.2022 அன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து சிகிச்சை பெற்ற அவர் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இருப்பினும் பத்மாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பத்மாவதி யின் குடல் பகுதியையும், கர்ப்பபையையும் சேர்த்து வைத்து தையல் போட்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவை பெற்ற கலெக்டர், இது பற்றி மருத்துவக்குழுவினர் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

தர்ணா

இருப்பினும் உரிய பதில் கிடைக்காததால் வெங்க டேசன் கடந்த 24-ந்தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியதோடு, பெட்ரோல் கேனை கையில் வைத்துக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வெங்கடேசன், மனைவி பத்மாவதி, 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) சாராசெலின் பால், நிலைய மருத்துவ அலுவலர் கவிதா, கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மறியல் செய்ய முயற்சி

அப்போது அவர்கள், தவறான சிகிச்சை அளிக்கவில்லை. இதேபோல் ஏதாவது ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, குடலும், கர்ப்பபையும் ஒட்டும். இதை சரி செய்து விடலாம் என்று சமாதானம் செய்தனர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாமல் கடலூர் -நெல்லிக்குப்பம் சாலையில் மறியல் செய்வதற்காக வெளியே வந்தனர்.

இதை பார்த்த போலீசார் அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தரையில் உருண்டு புரண்டு வெங்கடேசன் அழுதார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கலெக்டரை சந்தித்து மனு அளிப்பதற்காக சென்றார். இருப்பினும் இந்த சம்பவத்தால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்