கனமழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதம்

கனமழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதம்

Update: 2023-02-04 18:45 GMT

திருமருகல் ஒன்றியத்தில் பெய்த கனமழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிவாரணம்

திருமருகல் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் இடையாத்தாங்குடி, சேஷமூலை, திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், வடகரை, கோட்டூர், கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி, அம்பல், கட்டுமாவடி, திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களை மழைநீர் சூழ்ந்தது. நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலக்கடலை சேதம்

வேளாங்கண்ணியை அடுத்த தாண்டவமூர்த்திகாடு, காமேஸ்வரம், பூவைத்தேடி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி வேட்டைக்காரனிருப்பு, பொய்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை மழைநீரில் மூழ்கி அழுகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. . எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்