மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பசுமை ஆலயத் திட்டம்

மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பசுமை ஆலயத் திட்டம் தொடங்கப்பட்டது.

Update: 2022-08-03 10:36 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு உள்ள சித்தர்காடு சம்பந்தர் கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணை ஆணையர் எஸ்.மோகனசுந்தரம் பங்கேற்று, கோவில்களில் பசுமை ஆலயத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றும் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கோவில்களில் பயன்படுத்தப்பட்ட பசுமை கழிவுகளான பூக்கள், இலைகள், உணவுபொருள்கள் மற்றும் பழங்களை குப்பைத் தொட்டியில் சேகரித்து உரமாக்குவதற்கான பயிற்சி பட்டறை வகுப்பு எல்.இ.டி. ஒளித்திரையில் ஒளிபரப்பப்பட்டது.

இதில், மக்கும் கழிவு, பூக்கள், மலர் மாலை, அன்னதான கழிவுகளை இயற்கை முறையில் உரமாக்கி நந்தவனங்களுக்கு பயன்படுத்துவது குறித்தும், கோசாலையில் உள்ள மாட்டு சாணத்தில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்பட்டு, அன்னதான கூடத்துக்கு வழங்குவது குறித்தும் ஐடிசி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகந்தர் பயிற்சியளித்தார்.

கோவிலுக்கு தேவையான குப்பைகளை உரமாக்கும் பொருள்களை கோவில் உழவாரப்பணி மன்றத் தலைவர் அம்பலவாணன் வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் உதவி ஆணையர் முத்துராமன், மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை ஆலய திட்டத்தை செயல்படுத்தும் அவ்வவை கிராம நலசங்க தொண்டு நிறுவன செயலாளர் கிருஷ்ணகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன், அருட்செல்வன், அசோக், ராஜசேகர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்