சதுரகிரி மலையில் தீ: 3 ஆயிரம் பக்தர்கள் தரை இறங்க முடியாமல் தவிப்பு

சதுரகிரி மலையில் ஏற்பட்ட தீயினால் 3 ஆயிரம் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Update: 2023-07-17 20:39 GMT

வத்திராயிருப்பு,

சதுரகிரி மலையில் ஏற்பட்ட தீயினால் 3 ஆயிரம் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆடி அமாவாசை வழிபாடு

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் மலைப்பகுதி வழியாக கோவிலுக்கு நடந்து சென்றனர்.

காட்டுத்தீ

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில், மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட் வனப்பகுதியில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத் தீப்பற்றியது.

கடந்த 2 மாதங்களாக இப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் காட்டாறுகள், ஓடைகள் வறண்டு கிடந்தன. செடி, கொடிகள் காய்ந்து இருந்தன. எனவே காட்டுத்தீயானது வேகமாக பரவியது.

பக்தர்கள் தவிப்பு

இதனால் நேற்று அமாவாசை தரிசனத்திற்காக சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி வர தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோவில் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பக்தர்கள் குற்றச்சாட்டு

சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை நுழைவு வாயிலில் சோதனை செய்யப்பட்டு, தீப்பற்றும் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பக்தர்களிடம் இருந்தால் அகற்றப்படுவது வழக்கம். சுற்றுச்சூழல் பராமரிப்பு கட்டணமாக நபருக்கு ரூ.10 செலுத்திய பின்னரே வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் சமீப காலமாக வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பதோடு தங்கள் பணியை முடித்துக் கொள்கின்றனர் என்றும், மலைப்பாதையில் 5 இடங்களில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு அறை கட்டப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு பணிக்கு யாரும் இருப்பதில்லை. இதனால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படுகிறது எனவும் பக்தர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்