காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் - விஜயகாந்த்

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2023-02-16 10:20 GMT

சென்னை,

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 பேர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி சார்பில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற போது இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிரியர்களை நம்பிதான் பள்ளி மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மாணவர்களுக்கு எதுவும் நடக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டியது உடன் செல்லும் ஆசிரியர்களின் பொறுப்பும் கடமையும். ஆனால் இங்கு 4 மாணவிகள் உயிரிழந்திருப்பதற்கு ஆசிரியர்களின் கவனக்குறைவே காரணம். மாணவிகள் ஆற்றில் இறங்குவதை தடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிள்ளைகளை இழந்து பெற்றோர்கள் கதறுவதை பார்த்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாத வண்ணம் அரசு பார்த்து கொள்ள வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதாது. ஒவ்வொரு மாணவியின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்