கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2024-08-12 13:30 GMT

கோப்புப்படம் 

சென்னை,

திருவாரூர் மன்னார்குடியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரின் மகள் துர்கா என்பவர், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பணி ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அவர் பெற்றுக் கொண்டார்.

நகராட்சி ஆணையராக பணி ஆணை பெற்ற துர்கா அளித்த பேட்டியில், "தூய்மைப் பணியாளராக எனது தந்தை சந்தித்த அனைத்து கஷ்டத்தையும் பார்த்துள்ளேன். தாத்தா, அப்பா தூய்மைப் பணியாளர்களாக இருந்தபோதும் நான் படித்து நகராட்சி ஆணையராக வந்துள்ளேன். நான் நகராட்சி ஆணையராக பணியாணை பெற்றதன் மூலம் எனது தலைமுறையே மாற்றம் அடைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் துர்காவின் வீடியோவை பகிர்ந்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்!

கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் துர்கா அவர்களே எடுத்துக்காட்டு! நான் மீண்டும் சொல்கிறேன்… கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து!" என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்